Published Date: July 31, 2025
CATEGORY: EVENTS & CONFERENCES

சென்னையில் நடைபெற்ற முதலாவது அறிவுசார் சொத்துரிமை மாநாட்டை தொடங்கி வைத்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்தியாவில் மூன்றாவது பெரிய மென்பொருள் ஏற்றுமதியாளராக தமிழகம் திகழ்வதாக தெரிவித்தார். இந்த மாநாட்டில் ஆறு முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் (ஐடிஎன்டி) சார்பில் முதலாவது அறிவுசார் சொத்துரிமை மாநாடு சென்னையில் நேற்று நடைபெற்றது. ‘அறிவுசார் மையம் மூலம் தமிழகத்தை இந்தியாவின் புதுமை தலைநகரமாக மாற்றுதல்’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த மாநாட்டை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து தொழில்நுட்ப கண்காட்சியை பார்வையிட்டார். தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முன்னிலை வகித்தார்.
இந்த மாநாட்டில் டீப் டெக் தொழில்நுட்பம், ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் தேசிய ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம், மகேந்திரா, போஷ் உள்ளிட்ட ஆறு முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு தொழில்நுட்ப பரிமாற்ற வசதி மையம் மூலம் ஆராய்ச்சியாளர்களுக்கு உதவும் வகையில் நான்கு முன்னணி சட்ட நிறுவனங்களுடன் சட்டப்பூர்வ பங்குதாரர்களின் விண்ணப்பக் கடிதங்கள் பரிமாற்றம் செய்யப்பட்டன.
இதையடுத்து செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ், தொழில்நுட்ப மருத்துவம், விண்வெளி தொழில்நுட்பம், சைபர் பாதுகாப்பு, குவாண்டம் தொழில்நுட்பம் போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் உள் வளர்ச்சி பெற்ற 5 ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு ஐடிஎன்டி மையத்தின் ஃபவுண்டேஷன் நிதியின் கீழ் காசோலைகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது:
திராவிட இயக்கம் எப்போதும் புதிய தொழில்நுட்பங்களை ஊக்குவிக்கும். அந்த வகையில் ஒவ்வொரு முறையும் திமுக ஆட்சிக்கு வரும்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவையும் சென்றடைவது உறுதி செய்யப்படும்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழகம் பல்வேறு புதிய சாதனைகளை எட்டியுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகம் இந்தியாவில் மூன்றாவது பெரிய மென்பொருள் ஏற்றுமதியாளராக மாறியுள்ளது.
சென்னை மென்பொருள் சேவைகளின் தலைநகரமாக அழைக்கப்பட்டு வருகிறது. அதேபோல் முன்னணி ஐடி நிறுவனங்கள் கோவை, மதுரை போன்ற இரண்டாம் கட்ட நகரங்களிலும் தங்களது செயல்பாடுகளை விரிவுபடுத்தி வருகின்றன. ஐடி துறையுடன் இணைந்து ‘நான் முதல்வர்’ திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. டிஜிட்டல் அணுகலை வலுப்படுத்த சென்னை, தாம்பரம், ஆவடி மற்றும் கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 2,000 இடங்களில் வைஃபை கருவிகள் நிறுவப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் பிரஜேந்திர நவ்னித், எல் கார்ட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கார்த்திகேயன், ஐடிஎன்டி மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வனிதா வேணுகோபால், சென்னை ஐஐடி ஆராய்ச்சி பூங்காவின் தலைமை நிர்வாக அதிகாரி நாட் மாலுப்பிள்ளை, மாநில திட்டக் குழுவின் துணைத் தலைவர் ஜெயரஞ்சன், தேசிய ஆராய்ச்சி மேம்பாட்டு கழகத்தின் தலைவர் அமித் ரஸ்டோகி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Media: Hindu Tamil